சபரிமலையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் வரத்தே இல்லாததால் நடைபாதை மற்றும் சன்னிதானத்தில் பக்தர்கள் நடமாட்டம் இல்லாத நிலையே இருந்தது.
பொதுவாக சபரிமலையில் விடுமுறை நாட்களில் நடைதிறந்து இருந்தால் பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும். எப்போதும் பக்தர்கள் சரணகோஷம் செவிகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். சனிக்கிழமை மாலைமுதல் பக்தர்கள் வரத்து அதிகளவில் காணப்படும். நடைபாதையில் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
ஆனால், இதற்கு நேர்மாறாக இந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில்
பக்தர்களின் வருகை நூறு எண்ணிக்கையில் மட்டுமே இருந்தது. பம்பை - நீலிமலையேற்றம் - அப்பாச்சிமேடு - சன்னிதானத்தில் மிக அமைதியான சூழ்நிலையே நிலவியது. கடைகள் அனைத்தும் மூடியிருந்தன. சபரிமலையில் நடை அடைக்கப்பட்ட காலம் போன்ற காலநிலையே நிலவியது.
இதனிடையே, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பகலில் சோபன மண்டபத்தில் 25 கலசங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து ஐயப்பனுக்கு கலசாபிஷேகம் நடத்தினார்.