நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா என்று ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவது குறித்து குரியன் ஜோசப் தெரிவித்ததாவது,
"நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறையப்போகிறதா? அரிதிலும் அரிதான வழக்கில் மற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி அனைத்து வாய்ப்புகளும் முடிவடைந்தது என்றால் மட்டுமே மரண தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என பச்சன் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும். ஒருவேளை தூக்கிலிடப்பட்டால், அந்த குற்றத்தை மக்கள் மறந்துவிடுவார்கள். எனவே, இதன்மூலம் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை சமூகத்திடம் கொண்டுபோய் சேர்க்கலாம்" என்றார்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் மரண தண்டனை நிறைவேற்றம் இதுவரை மூன்று முறை நிறுத்தி வைக்கப்பட்டு இறுதியாக நான்காவது முறையாக தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு இவர்கள் நால்வரும் தூக்கிலிடப்படவுள்ளனர்.