கம்மம்: கரோனா எதிரொலி காரணமாக சவூதி அரேபியாவில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், தெலங்கானாவில் ஒரு திருமணம் விடியோ கால் மூலமாக நடத்தப்பட்டுள்ளது.
கோத்தகுடேம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபியின் மகளுக்கும், கரீம் நகரைச் சேர்ந்த மொஹம்மத் அத்னன் கானுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
மணமகன் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பணியாற்றி வருகிறார். திருமணத்துக்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மணமகனும், அவரது பெற்றோரும் இந்தியா வர திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா எதிரொலியால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மணமகன் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனால், திருமணத்தை ஒத்திப்போட மணமக்கள் வீட்டார் விரும்பவில்லை. எனவே, நிக்காவை திட்டமிட்டபடி நடத்துவது என்றும், சம்பிரதாயங்களை விடியோ கால் மூலம் செய்யவும் ஒப்புக் கொண்டு, அதன்படியே நடத்தி முடிக்கப்பட்டது.
தெலங்கானாவில் கரோனா காரணமாக, விடியோ கால் மூலம் நிக்கா நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.