கரோனா எதிரொலி: உத்தரப்பிரதேசத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ்
லக்னௌ: கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மாணவர்களை ஆண்டு இறுதித் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாமலேயே, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மார்ச் 23ம் தேதி முதல் மார்ச் 28ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
தற்போது கரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக உத்தரப்பிரதேசத்தில் அனைத்துப் பள்ளிகளையும் ஏப்ரர்ல 2ம் தேதி வரை மூட மாநில கல்வித் துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திரையரங்குகள், அனைத்துக் கல்வி நிலையங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் என அனைத்தையும் ஏப்ரல் 2ம் தேதி வரை மூட மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.