போபால்: பாரதிய ஜனதா கட்சி ஹிட்லர் போல் செயல்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தையடுத்து பாஜக ஆதரவுடன் பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருக்கும் 15 காங்கிரஸ் எம்,எல்.ஏக்களை பார்ப்பதற்காக முயன்ற, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மற்றும் அவருடனிருந்த முக்கியத் தலைவர்கள் புதனன்று போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி ஹிட்லர் போல் செயல்படுவதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுள்ளதாவது:
பெங்களூரூவில் பாஜகவினரால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை காணச்சென்ற, காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் திக்விஜய சிங் மற்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த செயல் முழுக்க ஹிட்லர் போல் சர்வாதிகாரத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை நிலையிழக்கச்செய்வதன் வாயிலாக ஜனநாயக மரபுகளை கொலை செய்து பாஜக நிகழ்த்திவரும் செயல்களை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவை உறுப்பினர்களை பார்க்க எங்களை ஏன் அனுமதிக்கவில்லை? என்ன விதமான பயம் நிலவுகிறது அர்களிடம்?
தற்போது கைது செய்யப்பட்ட எங்கள் தலைவர்களை விடுவிப்பதுடன், அங்கு சிறைவைக்கப்பட்டுள்ள எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியிலே விட வேண்டும். பாஜகவிடம் பெரும்பாண்மை இல்லை. அதேபோல சிவராஜ் சிங் சவுகான் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நியமிக்கப்படவும் இல்லை. பாஜக இங்கு ஒரு அரசாங்கத்தை உருவாக்க இயலாது. ஆனால் முதலமைச்சராக வேண்டும் என்ற ஷிவ்ராஜ் சிங் சவுகானின் படபடப்பை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவினரால் அதிகாரம் இல்லாமல் அமைதியின்றி காணப்படுகின்றனர்.அவர்களால் உறங்க இயலாமல் பகல் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். அதற்காக அவர்கள் அதிகாரிகளை மிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.