கரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என தலைமை பொருளாதார ஆலோசகர் கே. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
"அமெரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பங்குச் சந்தைகள் நிலைகுலைந்து போயுள்ளன. கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்றத் தன்மையே நிலவுகிறது. எப்போதெல்லாம் நிச்சயமற்றத் தன்மை நிலவுகிறதோ அப்போதெல்லாம் பங்குச் சந்தைகளில் பதற்றமான சூழல் உருவாகும். இதன் விளைவாக பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.
நாம் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும். என்னுடைய கணிப்பின்படி, இது ஏப்ரல் வரை நீடிக்கும். கரோனா வைரஸால் முதல் நபர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 22-ஆம் தேதி தகவல் வெளியானது. மற்ற நாடுகளில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிவேகமாக கூடியது.
பொருளாதாரத்தில் இதன் தாக்கம் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மக்கள் வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டனர்.
இவை முடிவுக்கு வந்த பிறகே இதன் தாக்கத்தை மதிப்பிட முடியும். கரோனா வைரஸால் நிச்சயமற்றத் தன்மை நிலவி வருவதால், பங்குச் சந்தைகளிலும் நிச்சயமற்றத் தன்மையே நிலவும்.
சர்வதேச முதலீட்டாளர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அனைத்து முதலீடுகளையும் ஒரே இடத்தில் குவிக்கக் கூடாது" என்றார்.