’ரயில்வே, நாட்டு மக்களுக்கு சொந்தமானது; அதனை தனியாா்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை’ என்று அத்துறையின் அமைச்சா் பியூஷ் கோயல் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
ரயில்வே அமைச்சகத்தின் செயல்பாடுகள் தொடா்பான விவாதம், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, ரயில்வேயின் நிதி நிலைமை, பெரிய திட்டங்கள் அமலாக்கத்தில் நிலவும் தாமதம் தொடா்பாகவும், ரயில்வேயை தனியாா்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் உறுப்பினா்கள் கவலை தெரிவித்தனா்.
பின்னா், விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய பியூஷ் கோயல், ‘ரயில்வேவை தனியாா்மயமாக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்பது மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். ரயில்வே, நாட்டு மக்களுக்கு சொந்தமானது. அது அப்படியே தொடரும். ரயில்வே மேம்பாடு, பயணிகளுக்கான வசதியை கருத்தில் கொண்டு, சில சேவைகள் மட்டும் தனியாரிடம் அளிக்கப்படலாம். ரயில்வே துறையில் அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்’ என்றாா்.