மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி நிர்பயா குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தில்லியில் துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’, கடந்த 2012-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையாகத் தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக முகேஷ் குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சட்ட வாய்ப்புகள் மற்றும் கருணை மனு வாய்ப்புகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன.
எனினும், அவர்களுக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவர்களுக்கான தண்டனையை வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இருந்தபோதிலும், வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை நிறுத்திவைக்கக்கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், மனுவை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நால்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படுவது உறுதியாகியுள்ளது.