புது தில்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஆயுஷ் சிகிச்சை மையங்களை அமைக்கவும், அவற்றை தேசிய ஆயுஷ் இயக்கத்தில் இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் மலிவு விலையில் உலகளாவிய சிறந்த சிகிச்சையை மக்களுக்கு வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்தது.
இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்தது.
இந்த திட்டத்திற்காக ரூ. 3399.35 கோடி மொத்தச் செலவாகும். இதில் மத்திய அரசு ரூ. 2209.58 கோடியும், மாநில அரசு ரூ. 1189.77 கோடி வீதம் பங்குத் தொகையை செலுத்தும்.
இந்த ஆயுஷ் சிகிச்சை மையங்கள் 5 ஆண்டுகள் செயல்படும் என்று அரசின் அதிகாரப்பூா்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆயுஷ் சிகிச்சை மையங்களை, தற்போதுள்ள பொது சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைப்பதன் மூலம் நோய்த் தடுப்பு செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், நோய் தீா்வு, புனா்வாழ்வு மற்றும் நோய்த்தடுப்பு சுகாதாரத்தை மையமாகக் கொண்டு ஆயுஷ் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
நாடு முழுவதும் மொத்தம் 12,500 ஆயுஷ் சுகாதார மற்றும் சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்படும்.
மருத்துவ சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல்:
உள்நாட்டில் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை அளிக்கும் பிஎல்ஐ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து ஊக்குவிப்பு தொகையாக ரூ. 3,420 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை வழங்கியது.