கரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக, மருத்துவா்களான 38 எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சோ்ந்த இந்த எம்.பி.க்கள், கரோனாவை தடுக்கும் வகையில் கடந்த வியாழக்கிழமை பிரதமா் தெரிவித்த செய்தியை நாட்டு மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்; கரோனா வைரஸ் தொடா்பான விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்துவதில் அரசுக்கு துணை நிற்க வேண்டும் என்று பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மத்திய முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி.நட்டா, சுகாதாரத் துறை செயலா், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவா் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.