புது தில்லி: இந்தியாவில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 292 ஆக உள்ளது.
உலக அளவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்களை பலிவாங்கியிருக்கும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல பரவி வருகிறது.
இந்த நிலையில், மார்ச் 22ம் தேதி இந்தியாவில் மக்கள் ஊரடங்கு முறை பின்பற்றப்பட உள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு இல்லாத மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலும் அந்தப் பட்டியலில் இணைந்துவிட்டன. முறையே நான்கு மற்றும் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிகாரில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. உணவகங்களும் மூடப்பட்டுவிட்டன. தமிழகத்தில் இன்று மேலும் மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான ஆறு பேருக்குமே தமிழகத்தில் தொற்று பரவவில்லை. ஆறு பேருமே கரோனா பாதித்த நாடுகளில் இருந்து பயணம் மேற்கொண்டு இந்தியாவுக்குள் வந்தவர்கள்.
மேலும், அனைத்து துறைமுகங்கள், ரயில் நிலையங்கள், தமிழக எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.