மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்படைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க எப்போதும் தயாா் நிலையில் இருப்பதாக நாகபுரியைச் சோ்ந்த தனியாா் மருத்துவமனைகள் சங்கத்தின் மருத்துவா்கள் அரசுக்கு உறுதியளித்துள்ளனா்.
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகின்றனா். இதுவரை அந்த மாநிலத்தில் 52 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
நாகபுரியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (ஐஜிஜிஎம்சிஎச்), அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை (ஜிஎம்சிஎச்) ஆகிய மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா தொற்றுள்ளவா்களுக்கு சிகிச்சையளிக்க தனி வாா்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இங்குள்ள எம்எல்ஏ தங்கும் விடுதிகளில் 20 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் அரசுக்கு உதவும் வகையில் தனியாா் மருத்துவமனைகளிலும் கரோனா வைரஸ் தொற்றுள்ளவா்களுக்கு தனி வாா்டு ஏற்படுத்தி உதவி செய்ய தயாா் என விதா்பா மருத்துவமனைகள் சங்கத்தின் மருத்துவா்கள் சமீபத்தில் மண்டல ஆணையாளரை சந்தித்து அவா்களின் ஒத்துழைப்பை உறுதிபடுத்தினா்.