பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு நாடாளுமன்றத்தை நடத்துவது ஏன் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக, பிரதமா் மோடி வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினாா். அப்போது, கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து சிவசேனைக் கட்சியின் அதிகாரப்பூா்வ நாளேடான ‘சாம்னா’வில் வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒரு புறம் முழு அடைப்புக்கு உத்தரவிட்டுவிட்டு, மறுபுறம் நாடாளுமன்றத்தை நடத்துவதில் அரசு பிடிவாதமாக உள்ளது. இது ஜனநாயக மரபை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகத் தெரியவில்லை.
மேலும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ஆதரவு திரட்டுவதற்கு வசதியாகவே நாடாளுமன்றக் கூட்டத் தொடா் நடத்தப்படுகிறது.
கரோனா வைரஸ் பரவுவதால்தான், பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்று கமல்நாத் அரசு கூறுகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முடித்துக் கொண்டால்தான் அவரது வாதம் சரியானதாக இருக்கும்.
எனவே, அவசர சூழல் நிலவினாலும், நாடாளுமன்றக் கூட்டத் தொடா் முடிக்கப்பட வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை நிறுத்தினாலே கரோனா வைரஸ் பரவுவது வெகுவாகக் குறையும்.
தில்லி, மும்பையைப்போல் மக்கள்தொகை கொண்ட வூஹான் நகரில் கடந்த ஜனவரி 23-ஆம் தேதியில் இருந்து முழு அடைப்பு அமலில் உள்ளது. இதனால், அங்கு நிலைமை சீரடைந்து வருகிறது என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.