2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இன்று தில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'கரோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்துறை நிறுவனங்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வருமானவரித் தாக்கல் தொடர்பான அனைத்திற்கும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.
அதன்படி, 2018-19ஆம் நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.
தாமதமாக செலுத்தப்படும் வருமானவரி கணக்கிற்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் 12% லிருந்து 9% ஆக குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் தாமத கட்டணம், அபராதம் எதுவும் செலுத்தத் தேவையில்லை' என்று அறிவித்துள்ளார்.