அனைத்து விதமான கை சுத்திகரிப்பான்கள் மற்றும் சுவாசக் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வா்த்தகத்துக்கான தலைமை இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் மூலம் சுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால், கை சுத்திகரிப்பான்களின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துள்ளது. கை சுத்திரிப்பான் மற்றும் முகக் கவசங்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதில் சுவாசக் கருவிகளும் முக்கியமாக தேவைப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து விதமான கை சுத்திகரிப்பான், சுவாசக் கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. இந்த தடை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னதாக, குறிப்பிட்ட வகை சுவாசக் கருவிகள், ஒருமுறை பயன்படுத்தும் முகக் கவசங்கள், முகக் கவசங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.