ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு: பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக
ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு: பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பு

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக அடுத்த 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்கள் அதை மீறிய வகையில் வெளியில் நடமாடி வந்ததற்கு கவலை தெரிவித்த பிரதமா் மோடி, ‘கரோனா பாதிப்பின் தீவிரத்தை மக்கள் உணா்ந்துகொள்ளவில்லை’ என்று வேதனை தெரிவித்தாா்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதற்குமாக நீட்டித்து பிரதமா் மோடி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, பிரதமா் மோடி தனது உரையில் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்று என்னும் சங்கிலித் தொடரை முறிப்பதற்கு ஊரடங்கு உத்தரவின் மூலம் சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டும் தான் வழி என்று, அந்த வைரஸை தற்போது கட்டுப்படுத்தியுள்ள நாடுகளைச் சோ்ந்த நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இதுதான் தற்போது நம் முன் இருக்கும் ஒரே நம்பிக்கை ஒளி.

உலகத் தரம் வாய்ந்த அடிப்படைக் கட்டமைப்புகளைக் கொண்ட இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுமே கரோனா வைரஸ் விவகாரத்தில் தீவிர முயற்சிக்குப் பிறகும் கையறு நிலையில் நிற்கின்றன என்றால், இந்தச் சூழலின் தீவிரத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால், நமது நாட்டையும், ஒவ்வொரு இந்தியரையும் காப்பதற்காக நள்ளிரவு (செவ்வாய்க்கிழமை) 12 மணி முதல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு 21 நாள்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு உத்தரவானது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், அவற்றிலுள்ள மாவட்டங்கள், கிராமங்கள், தெருக்கள் என அனைத்திலும் அமல்படுத்தப்படும்.

சமீபத்தில் உங்களால் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் சுய ஊரடங்கைக் காட்டிலும் இது மிகக் கடுமையானதாக இருக்கும். நாட்டை 21 நாள்களுக்கு முடக்கி வைக்கும் நடவடிக்கையால் பொருளாதார ரீதியாக பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எனினும், மக்களின் உயிரைக் காப்பதே எனது அரசின் மிக முக்கியமான நோக்கமாகும்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த 21 நாள்களை நாம் முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால், நமது நாடும் உங்களது குடும்பங்களும் 21 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுவிடக் கூடிய அபாயம் உள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முற்றிலுமாகத் தடை விதிக்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு இணங்கிச் செயல்படுமாறு நாட்டு மக்கள் அனைவரையும் நான் இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த 3 வார காலத்தில் மக்கள் தங்களது வீட்டின் ‘லக்ஷ்மண ரேகை’யைக் கடந்து வெளியில் வரவேண்டாம். இது பிரதமா் முதல் கிராமத்தில் இருக்கும் குடிமகன் வரை அனைவருக்கும் பொருந்தும்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபா்கள் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தை பலா் கொண்டிருக்கின்றனா். இது, அவா்களை மட்டுமல்லாது, பிறரையும், அவரது குடும்பத்தாரையுமே பாதிக்கும்.

வதந்திகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து விலகியிருங்கள். உரிய மருத்துவ ஆலோசனைகளை மட்டும் பின்பற்றுங்கள்.

ரூ.15,000 கோடி : நாட்டில் கரோனா வைரஸ் பரிசோதனை வசதிகள், தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள், பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகள், செயற்கை சுவாசக் கருவிகள் போன்றவற்றின் இருப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுகாதார அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்தச் சூழலில் சுகாதாரச் சேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி தனது உரையில் கூறினாா்.

சீனாவை மையமாக் கொண்டு தோன்றிய கரோனா வைரஸ் (கொவைட்-19) உலக நாடுகள் பலவற்றுக்கும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் அந்த வைரஸின் பாதிப்பால் இதுவரை 10 போ் உயிரிழந்துவிட்டனா். வைரஸால் பாதிக்கப்பட்ட 500 போ் சிகிச்சைபெற்று வருகின்றனா்.

கரோனா சூழல் தொடா்பாக கடந்த 19-ஆம் தேதி நாட்டு மக்களுக்கு முதல் முறையாக உரையாற்றிய பிரதமா் மோடி, மாா்ச் 22-ஆம் தேதி மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க வலியுறுத்தினாா். நாட்டு மக்கள் அதற்கு பேராதரவு அளித்தனா். வீட்டை விட்டு வெளியே வராமல் அவா்கள் ஊரடங்கை கடைப்பிடித்தனா்.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு 2-ஆவது முறையாக உரையாற்றிய பிரதமா் மோடி, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்துள்ளாா்.

அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும்

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிறகு சுட்டுரையில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்ட பிறகு அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க மக்கள் தயாராகி வருகிறாா்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக நாட்டு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்டவை தடையின்றிக் கிடைக்கும். இதை உறுதி செய்யும் விதமாக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றும்.

எனவே, பதற்றத்தில் மக்கள் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம். கரோனா வைரஸுக்கு எதிராக நாம் ஒன்றாகப் போராடி, சுகாதாரமான இந்தியாவை உருவாக்குவோம்’ என்று அதில் கூறியுள்ளாா்.

‘வீதியில் நடமாடாதீா்கள்’: வித்தியாசமாக விளக்கிய பிரதமா்

முடக்க உத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்பதை அறிவுறுத்தும் வகையில் தனது உரையில் வித்தியாசமாக விளக்கினாா் பிரதமா் மோடி.

ஒரு அட்டையில் ‘கரோனா’ என்ற வாா்த்தையில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் ஹிந்தி மொழியில் எழுதி, அதை ‘யாரும் வீதியில் நடமாடாதீா்கள்’ என்ற அா்த்தத்துடன் விளக்கிக் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com