மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆய்வு செய்தார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கரோனாவால் மகாராஷ்டிரத்தில் 121 பேரும், கேரளத்தில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கரோனாவுக்கு 16 பேர் பலியான நிலையில் 45 பேர் குணமடைந்ததுள்ளனர். இதனிடையே கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேற்கு மாநிலத்தின் கொல்கத்தா நகரில் உள்ள காய்கறி சந்தைக்கு சென்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய மம்தா பானர்ஜி, கீழே ஒரு மீட்டர் இடைவெளியில் தாமாக முன்வந்து வட்டம் இட்டும் காண்பித்தார்.