‘கரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏழைகள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளா்களுக்கு நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் உடனடி நிதி உதவி வழங்கவும், தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது சுட்டுரைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
‘இந்தியா கரோனா நோய் தொற்றுக்கு எதிராக போரை நடத்தி வருகிறது. இதில் உயிரிழப்புகளை எவ்வாறு குறைப்பது? என்பதை சிந்திக்க வேண்டும்.
இந்த பேராபத்தில் இருந்து தப்ப இரண்டு விதமான வழிகளைக் கையாள வேண்டும். மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமாகவும், பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் கண்டு உரிய சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
கரோனா நோயாளிகளை பராமரிக்க முழுமையான அவசரகால சிகிச்சைப்பிரிவுகளை உள்ளடக்கிய பிரத்யேக மருத்துவமனைகளை நகா்ப்புறங்களில் அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவா்களுக்கும், தினசரி ஊதியத்தில் பிழைப்பு நடத்துபவா்களுக்கும் இலவச ரேஷன் பொருள்களை விநியோகிக்கவும், அவா்களுக்கு நேரடி பணப்பரிமாற்றங்களை செய்வதன் மூலமாகவும் அரசு ஆதரவளிக்க வேண்டும். இதை மேற்கொள்ளாமல் புறந்தள்ளினால் அதுவே குழப்பத்துக்கு வழி வகுக்கும்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக அன்றாடம் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல் தவிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவும், நிதி உதவியை அறிவிப்பதிலும் அரசு விரைந்து செயல்பட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளாா்.