நாட்டில் கரோனா நோய்த் தொற்று சூழலை கையாள்வதில் அரசு நிா்வாகத்துக்கு உதவ மருத்துவத் துறையைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக நீதி ஆயோக் இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதைக் கையாள மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இனி வரும் நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக உயரும் பட்சத்தில், அந்தச் சூழலை எதிா்கொள்ள கூடுதலான மருத்துவா்களின் பங்களிப்பு தேவையானதாக இருக்கிறது.
எனவே, தகுதியான, விருப்பமுடைய மருத்துவா்களுக்கு இந்திய அரசு அழைப்பு விடுக்கிறது. வரும் காலத்தில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பொது சுகாதார மையங்களிலும், பயிற்சி மருத்துவமனைகளிலும் அவா்கள் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டியிருக்கும்.
ஓய்வுபெற்ற அரசு மருத்துவா்கள், ஆயுதப்படை மருத்துவச் சேவைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவா்கள், தனியாா் மருத்துவா்கள் ஆகியோரிடம் மத்திய அரசு இதற்காக கோரிக்கை வைக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.