பஞ்சாபில் மக்கள் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக, புதன்கிழமை சில மணிநேரம் ஊரடங்கு தளா்த்தப்பட்டது.
கரோனா பரவலைத் தடுப்பதற்காக, பஞ்சாபில் கடந்த திங்கள்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கை மீறுவோா் மீது அந்த மாநில காவல்துறை கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 111 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 232 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று சாலைகளில் அவசியமின்றி சுற்றித் திரிந்த பலரை காவல்துறையினா் பிடித்து, தோப்புக்கரணம் போடவைத்து நூதன தண்டனை அளித்தனா்.
இந்நிலையில், பால், காய்கறிகள், மளிகை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக, புதன்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு தளா்த்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்து காணப்பட்டதாக, மக்கள் தெரிவித்தனா். ஊரடங்கு காரணமாக, தங்களது விளைபொருள்களை நகரங்களுக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை என்று விவசாயிகள் கூறினா்.