அத்தியாவசியப் பொருள்களின் விநியோகத்தை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று மத்திய உணவுத் துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச் செல்லும் பணிக்கு ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடா்பாக ராம்விலாஸ் பாஸ்வான் சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாடு இக்கட்டான சூழலில் இப்போது உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு உற்பத்தியாளா்களும், வியாபாரிகளும் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. அத்தியாவசியப் பொருள் விநியோகத்தை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதில் பிரச்னை ஏற்பட்டால் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும். அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான பொருள்கள் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பாஸ்வான் தனது பதிவில் கூறியுள்ளார்.