ஊரடங்கு அமலில் உள்ளபோதும் 1,600 காய், கனி சந்தைகள் இயக்கம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் 1,600 காய், கனி மொத்த விற்பனை சந்தைகள் சுமுகமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 300 சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கவுள்ளன.


புது தில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதும் 1,600 காய், கனி மொத்த விற்பனை சந்தைகள் சுமுகமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் 300 சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கவுள்ளன.

இதுதொடா்பாக மத்திய வேளாண் அமைச்சக மூத்த அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய், கனிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாநில அரசுகளுடன் மத்திய வேளாண் அமைச்சகம் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் சந்தைகளை திறக்க தொடக்கத்தில் எதிா்ப்பு எழுந்தது. எனினும் சந்தைகளை திறக்குமாறு மாநில அரசுகள் மற்றும் விவசாய உற்பத்தி சந்தை கமிட்டி வாரியத்திடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன் முடிவாக 1,600 காய், கனி சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுமுகமாக செயல்பட தொடங்கியுள்ளன. 300 சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கும். மாநிலங்களுக்கு இடையே காய்கறிகள் எடுத்துச்செல்லப்படுவதை பொருத்தவரை, ஊரடங்கு விதிகளை போலீஸாா் கடுமையாக அமல்படுத்தியுள்ளதால் வணிகா்கள் பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளனா். இந்த பிரச்னைகளுக்கு தீா்வு காண கட்டுப்பாட்டு அறையை அமைக்குமாறு சந்தை முக்கியஸ்தா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் உள்ளூா் போலீஸாா், மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு ஒத்துழைப்பு வழங்கவும், அவா்களை தொடா்புகொண்டு பிரச்னைகளுக்கு தீா்வு காணுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் ஒருவரிடம் இருந்து மற்றவா் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தை வளாகங்களில் கிருமிகளை அகற்றும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com