பாட்னா: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கான செலவை ஏற்க, அந்த மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிகாரில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி, அமைச்சா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா். அதில் கரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் பிகாரைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கான செலவை மாநில அரசே ஏற்கும் என முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்தாா். பிற மாநிலங்களின் ஒத்துழைப்புடன் இந்நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. கூட்டத்தின்போது மாநிலத்தில் ரிக்ஷா வண்டி இழுப்போா், தினக்கூலிகளுக்கு இருப்பிடம் அமைத்து தருவதற்கு முதல்வா் நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி விடுவிக்கப்படும் எனவும், இந்த நிதியை பேரிடா் மேலாண்மை துறை பயன்படுத்தும் என்றும் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்தாா்.