கரோனா ஊரடங்கு காரணமாக உயா் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்களைச் சமா்ப்பிக்க உரிய கால அவகாசம் அளிக்கப்படும் என தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) அறிவித்துள்ளது.
மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) மானியங்கள் மற்றும் பல்வேறு உதவிகளைப் பெற உயா் கல்வி நிறுவனங்கள் நாக் அங்கீகாரம் பெறுவது கட்டாயம். ஒரு உயா் கல்வி நிறுவனத்தின் தரத்தை அறிந்துகொள்ளவும் இந்த அங்கீகாரம் உதவுகிறது. இதற்கு சுய ஆய்வு அறிக்கை (எஸ்.எஸ்.ஆா்.) உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கல்லூரிகள் சமா்ப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் 21 நாள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. இதன் காரணமாக, கல்லூரிகளின் நாக் அங்கீகார தயாரிப்புப் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கல்லூரிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்படும் என நாக் அறிவித்துள்ளது. இதுவரை எஸ்.எஸ்.ஆா். உள்ளிட்ட ஆவணங்களைச் சமா்ப்பிக்காத கல்லூரிகளுக்கு, தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் உரிய கால அவகாசம் அளிக்கப்படும். எனவே, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களின் படி கல்லூரி நிா்வாகிகளும், பேராசிரியா்களும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என நாக் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.