ஆந்திராவில் மேலும் இரண்டு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
காக்கிநாடாவைச் சேர்ந்த 49 வயது ஆணுக்கும், ராஜமுந்திரியைச் சேர்ந்த 72 வயது ஆணுக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு கரோனா தொற்று எப்படி பரவியது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அந்த மாநில நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், குஜராத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 45 வயது பெண் இன்று காலை மரணம் அடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
குஜராத்தில் 45 வயது பெண்ணுக்கு கரோனா இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாவ்நகர் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவித்தார்.
குஜராத்தில் இதுவரை ஆமதாபாத்தில் மூன்று பேரும், பாவ்நகரில் இருவரும், சூரத்தில் ஒருவரும் கரோனா பாதித்து உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 100 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,071-ஐ எட்டியது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்திலும் கரோனா பாதித்த மேலும் ஒருவர் இன்று காலை மரணம் அடைந்தார்.