வெளிமாநிலங்களில் இருந்து நடந்தே வந்து சேர்ந்த 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்காக, 350 பேருந்துகளை இயக்கியது பிகார் அரசு.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நடந்து வந்த மக்களை, தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்புப் பேருந்துகளை பிகார் மாநில போக்குவரத்துத் துறை இயக்கியுள்ளது.
அண்டை மாநிலங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் 13 ஆயிரம் பேர் பிகாரின் பல்வேறு எல்லைப்பகுதிகளில் திங்கள்கிழமை முதல் குவியத் தொடங்கினர்.
உடனடியாக அவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து, அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
பிகாரின் பல எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு வந்தடைந்த பொதுமக்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சிறப்பு பேருந்து மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேருந்துகளும் தூய்மைப்படுத்தப்பட்டு பிறகு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மாவட்டத்துக்கு ஒரு பேருந்து என்ற முறையில் நேற்று முதல் 350 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.
அதே சமயம், பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குச் சென்ற பிறகும், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.