தில்லியில் ஒரே கட்டடத்தில் வசித்தவர்களில் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு (மே. 17) ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த நிலையில் தில்லியின் கபாஷேராவில் உள்ள டி.சி அலுவலகம் அருகே கட்டடம் ஒன்றில் வசித்தவர்களில் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் தேதி அந்த கட்டடத்தில் வசித்த ஒருவருக்கு கரோனோ நோய்த் தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து அந்த கட்டடத்தில் வசித்தவர்களுககு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இன்று மட்டும் 41 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தில்லி தென் மேற்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேசிய ஊரடங்கு முடியும் வரை நாட்டின் தலைநகர் தில்லியின் அனைத்து மாவட்டங்களும் சிவப்பு மண்டலத்தின் கீழ் செயல்படும் என்று சனிக்கிழமை தில்லி அரசு தெரிவித்துள்ளது.