மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை

கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.


மும்பை: கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கு மட்டும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டிவிட்டது. பலி எண்ணிக்கை 450ஐக் கடந்து விட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட தாணே, நவி மும்பை, கல்யாண் மற்றும் நாக்பூர், புணே, நாசிக் பகுதிகளும் கரோனா பரவும் அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரோனா பாதித்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். மாநிலத்தின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மக்கள் அனைவரும் கொண்டு வரப்படுகிறார்கள் என்றும், இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரம் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெறும் 85 சதவீத மக்கள் மட்டுமே மாநில அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இருந்தனர். இப்போது ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மருத்துவமனைகளுக்கு அரசு நிர்ணயித்த அளவில் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com