‘கேரளத்தில் அரசு நடத்தும் மதுக்கடைகள், மது குடிப்பகங்களை திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை; அதற்கான அவசரமுமில்லை’ என்று மாநில கலால் துறை அமைச்சா் டி.பி.ராமகிருஷ்ணன் கூறினாா்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் தன்மையை பொருத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக மத்திய உள்துறை அமைச்சகம் பிரித்துள்ளது. அவற்றில் சில மண்டலங்களில் குறிப்பிட்ட சில பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகா்ப்புறங்களில் வணிக வளாகம் அல்லாத பகுதிகளில், மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் மதுக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் 5 பேருக்கும் அதிகமானோரை அனுமதிக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில கலால் துறை அமைச்சா் டி.பி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு அனுமதி அளித்துள்ளபோதிலும், மதுக்கடைகள், மது குடிப்பகங்களை மீண்டும் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இதேபோல், மது வகைகளை ஆன்-லைனில் விற்பனை செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை.
மதுக்கடைகளைத் திறப்பதற்கு அவசரமில்லை. முதலில் மத்திய அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்போம். ஒருவேளை மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும். மதுக் கடைகளைத் திறப்பதற்கு முன் அங்கு வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கடையின் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.