சொந்த ஊர் செல்லும் சிறப்பு ரயிலில் வழங்கப்பட்ட உணவுக்காக, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்குள் கடுமையாக சண்டையிட்டுக் கொண்ட விடியோ வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் கல்யாணில் இருந்து பிகார் மாநிலம் நோக்கி 1,200 புலம்பெயர் தொழிலாளர்களுடன் சிறப்பு ரயில் மே 6ம் தேதி புறப்பட்டது.
இந்த ரயில் மதியம் உணவு நேரத்தில் சட்னா ரயில் நிலையத்துக்கு வந்த போது, அதில் இருந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அப்போது, உணவுப் பொட்டலங்களைப் பெற, அங்கிருந்த தொழிலாளர்கள் முயன்றனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு சண்டையாக வெடித்தது.
இருக்கைகள் மீது ஏறிய தொழிலாளர்கள், ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். ஆனால், இந்த மோதலைப் பார்த்த ரயில்வே காவலர்கள், கரோனா அச்சம் காரணமாக அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை. கையில் இருந்து தடியைக் கொண்டு ஜன்னல் வழியாக அதட்டிய காவல்துறையின் குரல் அவர்களை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
இது தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு சுட்டுரை மூலம் தகவல் தெரிவித்து, சிறப்பு ரயில்களில் அனுப்படும் தொழிலாளர்கள் உணவு மற்றும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.