ஏழைகள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் குறைந்தபட்சம் 7,500 ரூபாயை மத்திய அரசு செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பியான ராகுல் காந்தி காணொலி வாயிலாக இன்றுசெய்தியாளர்களைசந்தித்தார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அளவைப் பொருத்து சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்கள் குறித்து அந்தந்த மாவட்டங்கள் தீர்மானிக்க வேண்டும். உண்மையில் இப்பகுதிகளில் கரோனா பாதிப்பு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பொருத்து வரையறுக்கப்பட வேண்டும்.
தேசிய அளவில் சிவப்பு மண்டலங்களாக இருக்கும் பகுதிகள் உண்மையில் பச்சை மண்டலங்கள் என முதல்வர்கள் கூறுகிறார்கள். எனவே, மாவட்ட அளவில் இதனை வரையறுப்பதே சிறந்தது.
எந்தவொரு பகுதியிலும் பொருளாதார விநியோகத்தில் பிரச்னை இருந்தால் அந்தந்த வணிகரே தெரிவிப்பார். சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு இடையே இருக்கும் மோதலை அறிய வேண்டும்.
ஊரடங்கு விஷயத்தில் மத்திய அரசு மக்களிடம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு முடிவடையும் நேரத்தில் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் குறித்து அரசு முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
மோடி அரசு, ஊரடங்கு உத்தரவை எப்படி விலக்கப் போகிறது? அதற்கான திட்டம் என்ன? முன்னேற்பாடுகள் என்ன? ஊரடங்கு முடிந்து வெளியே வரும் மக்களுடைய அச்சத்தைப் போக்க அரசு என்ன செய்யப் போகிறது? உள்ளிட்ட அனைத்து தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்கப்பட வேண்டும் மக்களின் அச்சத்தைப் போக்குவது அரசின் கடமை. இது விமர்சிக்க வேண்டிய நேரம் அல்ல, ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர தனி உத்தி தேவை. ஊரடங்கு என்பது ஆன்/ஆஃப் சுவிட்ச் அல்ல. இது மிகப்பெரிய மாற்றம். மத்திய அரசு, மாநில அரசு, மக்கள் ஆகிய மூன்றுக்கும் இடையேயான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது அவசியம்.
தற்போது ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவை பணம். எனவே, ஏழைகள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் குறைந்தபட்சம் 7,500 ரூபாயை மத்திய அரசு செலுத்த வேண்டும்.
சிறு, குறு தொழில்களையும் காப்பாற்ற வேண்டும். அனைவருக்கும் தேவையான உதவியைச் செய்வதுதான் தற்போதைய தேவை என்று பேசினார்.