கரோனா பேரிடருக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி சீனா மீது அதிருப்தியில் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றை சீனாவில் இருந்து மாற்றும் முடிவை கையில் எடுத்துள்ளார்.
இந்த நல்வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக் கொண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்தியா மருத்துவ உபரகணங்களைத் தயாரித்தல், உணவுத் தயாரிப்பு ஆலைகள், ஜவுளித்துறை, தோல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு ஆகிய 550 பொருட்களின் தயாரிப்பு ஆலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்திக்க சீனாவில் பரவிய கரோனா தொற்றேக் காரணம் என்பதால், அந்த நாட்டில் செயல்பட்டு வரும் அமெரிக்க நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு மாற்ற டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில்தான், சீனாவில் இயங்கி வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான மெட்டிரோனிக் பிஎல்சி மற்றும் அப்போட் லெபாரட்டிரீஸ் நிறுவனங்களிடம் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சீனாவில் இருந்து ஒரு நிறுவனத்தை அமெரிக்காவுக்கோ அல்லது ஜப்பானுக்கோ மாற்றுவதை விடவும், நிலத்தை கைப்பற்றுவது மற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவது என அனைத்துமே இந்தியாவில் மிகக் குறைவான செலவில் செய்ய முடியும் என்றும், அதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு வரும் வகையில், இந்தியச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கரோனாவால் சீனா முடக்கப்பட்டபோது ஏற்றுமதி - இறக்குமதி சங்கிலித் தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டதைப் போல இனி வருங்காலத்தில் நிகழவே கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, வியட்நாம் ஆகியவற்றுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.