கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவலை கர்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் வெளியிட்டுள்ளன.
கர்நாடகம்:
கர்நாடகத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி வரை 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 31 பேர் அஜ்மீருக்கும், 8 பேர் அகமதாபாத்துக்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 847 ஆக உயர்ந்துள்ளது.
ஒடிஸா:
ஒடிஸாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 362 ஆக உயர்ந்துள்ளது. இதில் 291 பேர் சிகிச்சையில் உள்ளனர், 68 பேர் குணமடைந்துள்ளனர், 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஹரியாணா:
ஹரியாணாவில் இன்று புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 695 ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் இன்று 45 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,753 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 107 ஆகவும் உயர்ந்துள்ளது. அங்கு மொத்தம் 1,470 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தியா:
இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டது. இதன்படி, நாடு முழுவதும் 62,939 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,357 பேர் குணமடைந்துள்ளனர். 41,472 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,109 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.