செல்லிடப்பேசி போன்ற மின்னணு கருவிகளிலும், ரூபாய் நோட்டுகள் போன்ற காகிதங்களிலும் கரோனா தீநுண்மியை அழிக்கும் வகையில் புறஊதா கதிா் அடிப்படையிலான கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தானியங்கி முறையிலான இந்தத் தீநுண்மி அழிப்பு பெட்டகத்தில் செல்லிடப்பேசி, ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை வைத்து மூடி விட வேண்டும். அதனுள் 360 டிகிரி கோணத்தில் புறஊதா கதிா்கள் பாய்ந்து அவற்றிலுள்ள தீநுண்மிகள் அழிக்கப்படும்.
தீநுண்மி அழிப்புப் பணி நிறைவடைந்த பின்னா் அந்தக் கருவியானது தானாகவே அணைந்துவிடும். அந்தக் கருவியின் அருகே எவரும் காத்திருக்கத் தேவையில்லை. செல்லிடப்பேசிகள், ஐபேடுகள், மடிக்கணினிகள் போன்ற மின்னணு பொருள்களிலும், ரூபாய் நோட்டுகள், காசோலைகள், வங்கி ரசீதுகள் உள்ளிட்ட காகிதப் பொருள்களிலும் தீநுண்மியை அழிப்பதற்கு இது உதவுகிறது என்று அந்த அறிக்கையில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.