
சென்னை: அந்தமான் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் 13-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதியில் வரும் 16-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமான் கடற்பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த வாரத் துவக்கத்தில் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது பலவீனமடைந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருப்பதாவது, தற்போது இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து காணப்பட்டாலும், இது மே 13-ம் தேதி வாக்கில் வலுப்பெறும். இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடற்பரப்புக்கும் இடையே மே 13-ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்திருந்தது.