மும்பை: மகாராஷ்டிரத்தில் கரோனா வார்டுகளில் உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் அங்கேயே பிளாஸ்டிக் பைகள் சுற்றப்பட்டு இருப்பது ஏற்கனவே விடியோ மூலம் வலைத்தளங்களில் பரவியது.
ஏற்கனவே சியோன் மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கான படுக்கையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு ஆங்காங்கே கிடத்தி வைத்திருப்பதை பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே தனது சுட்டுரையில் வெளியிட்டிருந்தார்.
இது மிக மோசமான செயல் என்று மருத்துவமனை நிர்வாகத்தையும் கண்டித்திருந்தார்.
நோயாளிகளுக்கு பக்கத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்களும் கிடப்பது அவர்களது மனநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பது இல்லை. மகாராஷ்டிர மாநில அரசின் செயல்பாடுகளை விமரிசிக்கும் வகையில் இந்த விடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.
இந்தியாவிலேயே கரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொண்ட மாநிலமாக இருப்பது மகாராஷ்டிரம். குறிப்பாக மும்பையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் இங்கு பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ நிதேஷ் ராணே இன்று மற்றொரு விடியோவை இணைத்துள்ளார். மும்பையில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருக்கிறது இந்த விடியோ மற்றும் புகைப்படங்கள்.
அந்த விடியோவில் உயிரிழந்த நோயாளிகளின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு படுக்கைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகே சில நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இந்த விடியோ குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை.