புது தில்லி: ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தில்லியில் உள்ள ஏர் இந்தியா தலைமை அலுவலகம் இரண்டு நாட்களுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் முழுவதும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பூட்டப்பட்டிருக்கும் என்றும், அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவருக்கு திங்கள்கிழமை மாலை கரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், இதையடுத்து தலைமை அலுவலகம் பூட்டில் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரே விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியா உள்ளது. இதுவரை மே 7 முதல் 14 வரை 12 நாடுகளில் இருந்து சுமார் 15 ஆயிரம் இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.