புது தில்லி: தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மே 17-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகள் அளிக்கலாம் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் 210 நாடுகளுக்குப் பரவி மக்களை உலுக்கி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் லட்சக்கணக்கில் உயர்ந்து வருகின்றது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், மே 17-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறிப்பு பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கப்படுகிறது.
இதுதொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறுகையில்,
மே 17-க்கு பிறகு என்ன செய்யலாம் என்பது குறித்து பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் தங்கள் ஆலோசனைகளை அரசுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களின் ஆலோசனைகளை புதன்கிழமை மாலை 5.00 மணிக்குள் delhicm.suggestions@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 1031, வாட்ஸ்அப் - 8800007722 எண்ணிலும் உங்கள் கருத்துகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
தேசிய தலைநகரில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து, பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று திங்களன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற விடியோ மாநாட்டில் முதல்வர் கேஜரிவால் தெரிவித்தார்.