உலகிலேயே இந்தியாவில்தான் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களின் மூத்த அதிகாரிகளுடன் கரோனா வைரஸ் தொடர்பாக காணொலி மூலம் அமைச்சர் ஹர்ஷவர்தன் உரையாற்றினார்.
இதன்பின்னர் அவர் பேசியதாவது:
நாட்டில் தினமும் 1 லட்சம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. நாட்டில் கரோனா பாதிப்பு இறப்பு விகிதம் 3.2% ஆக உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவிலேயே மிகக்குறைவாக இறப்பு விகிதம் உள்ளது. உலகளாவிய இறப்பு விகிதம் 7-7.5% ஆக உள்ளது.
நாட்டில் ஒவ்வொரு நாளும் குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு விகிதம் 31.70% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 347 அரசாங்க ஆய்வகங்கள் மற்றும் 137 தனியார் ஆய்வகங்கள் உள்ளன. இந்தியாவில் இப்போது 484 ஆய்வகங்கள் உள்ளன. நாட்டில் 8,147 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மீட்பு விகிதம் 78% ஆக உள்ளது, பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் 24 நாள்களாக உள்ளது. பந்திபோரா, ஷோபியான், அனந்த்நாக் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன என்று தெரிவித்தார்.