புது தில்லி: ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளில் ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தனி நீதிபதி விசாரிக்கும் புதிய நடைமுறை புதன்கிழமை (மே 13) அறிமுகமாகவுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் அமா்வு அல்லது அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வுதான் வழக்குகளை விசாரிக்கும். தற்போது முதல் முறையாக தனி நீதிபதி விசாரணை மேற்கொள்ளவிருக்கிறாா்.
முன்னதாக, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில், உச்சநீதிமன்ற விதிகளில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் திருத்தம் மேற்கொண்டது. அப்போது, 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளில் ஜாமீன் மேல்முறையீட்டு மனுக்கள், முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை தனி நீதிபதி மேற்கொள்ளும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், இந்த திருத்தங்கள் தொடா்பான அறிவிக்கை, உச்சநீதிமன்ற வலைதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில், குறிப்பிட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் தனி நீதிபதி விசாரிப்பாா். புதன்கிழமைமுதல் தனி நீதிபதி முன் மனுக்கள் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 34 ஆகும். தற்போது 32 நீதிபதிகள் பணியில் உள்ளனா்.