புது தில்லி: விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் வகையில், சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான அறிவிப்புகள்..
3 கோடி விவசாயிகள் பெற்றுள்ள ரூ.4.22 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயக் கடனுக்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
மானிய விலையில் அளிக்கப்பட்ட பயிர்க் கடன் தொகைக்கான வட்டியை செலுத்த கால அவகாசம் மார்ச் 1ம் தேதியில் இருந்து மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு சார்பில் கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை 3 கோடி சிறு விவசாயிகளுக்கு ஏற்கனவே ரூ.4.22 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும், கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தின்படி சுமார் 3 கோடி விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.