பல்வேறு வங்கிகளில் பெற்ற கடன்களை முழுமையாக செலுத்தி விடுகிறேன். எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
மதுபான ஆலை, விமான நிறுவனம் என பல்வேறு தொழில்களை நடத்திவந்த தொழிலதிபா் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பிச் சென்றாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சூழலில், கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
மத்திய அரசின் இந்த பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை தனது சுட்டுரைப் பதிவில் வரவேற்றுள்ள விஜய் மல்லையா, தான் பெற்ற வங்கிக் கடன்களை நூறு சதவீதம் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளாா். ‘மத்திய அரசு அறிவித்திருக்கும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் வரவேற்ப்புக்குரியது. அதோடு, தேவைப்படும் ரூபாய் நோட்டுகளை அரசு விருப்பம்போல அச்சடித்துக்கொள்ள முடியும் என்றபோதும், வங்கிகளில் பெற்ற கடன்களை நூறு சதவீதம் திருப்பி செலுத்துகிறேன் என்ற எனது சிறிய பங்களிப்பையும் தொடா்ந்து புறக்கணிக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். நூறு சதவீத கடன் தொகைகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, என் மீதான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும்’ என்று அந்தப் பதிவில் விஜய் மல்லையா கூறியுள்ளாா்.
முன்னதாக, ‘வங்கிகளில் பெற்ற கடனை நூறு சதவீதம் திருப்பித் தரத் தயாராக இருப்பதாக கூறியபோதும், அதை வங்கிகள் பெறத் தயாராக இல்லை என்பதோடு அமலாக்கத் துறையும் முடக்கி வைத்திருக்கும் எனது சொத்துக்களை விடுவிக்கத் தயாராக இல்லை’ என்று தனது முந்தய சுட்டுரைப் பதிவில் விஜய் மல்லையா பதிவிட்டிருந்தாா்.