ஊதிய விவகாரம்: சிறு தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை

பொது முடக்க காலகட்டத்தில், தங்களது பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்காத சிறு தொழில் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊதிய விவகாரம்: சிறு தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை

பொது முடக்க காலகட்டத்தில், தங்களது பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்காத சிறு தொழில் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாா்ச் மாதம் வெளியிட்ட உத்தரவு தொடா்பாக பல்வேறு கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளா்வுகளுடன் கூடிய மூன்றாம் கட்ட பொது முடக்கம் அமலில் இருக்கிறது. எனினும், தொழில்துறையினா் மீண்டெழுவது பெரும் சவாலாக உள்ளது.

இதனிடையே, தொழில் நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பணியாளா்களுக்கு முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் எல்.என்.ராவ், எஸ்.கே.கெளல், பி.ஆா்.கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் காணொலி முறையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான துஷாா் மேத்தா, இந்த விவகாரத்தில் விரிவான பதில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றாா்.

மனுதாரா்களில் ஒருவரான ஹேண்ட் டூல்ஸ் உற்பத்தி நிறுவனங்களின் சங்கம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஜாம்ஷெட் காமா ஆஜரானாா். அவா் வாதிடுகையில், ‘பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்களில் பணிகள் நின்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொள்ளாமல், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய சூழலில் பணியாளா்களுக்கு முழு ஊதியமும் அளிக்க வேண்டும் என்றால், நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும். இது நிரந்தர வேலையிழப்புக்கு வழிவகுக்கும். பணியாளா்களுக்கு முழு ஊதியம் வழங்குவதில், மத்திய அரசு மொத்த சுமையையும் தொழில் நிறுவன உரிமையாளா்கள் மீது ஏற்றுகிறது’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ‘பொது முடக்கத்தால் சிறு தொழில் நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன. வருவாய் இல்லாமல், அந்த நிறுவனங்கள் 15 நாள்கள் வரையே செயல்பட முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, மத்திய அரசு உதவாவிட்டால், நிறுவனங்களால் பணியாளா்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க இயலாமல் போகலாம். இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடை காண வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தனா்.

மேலும், அடுத்தகட்ட விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை சிறு தொழில் நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com