கர்நாடகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 85 ஆயிரத்து 940 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழகம் அடுத்த இடத்திலும் உள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நடாகத்தில் இன்று மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இத்துடன் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,079ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் 548 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இதுவரை 35 பேர் பலியான நிலையில் 494 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.