போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஜஹாங்கிராபாத் இடுகாட்டில் ஒன்றல்ல ஒரு டஜன் சவக்குழிகள் முன்கூட்டியே தோண்டிவைக்கப்பட்டுள்ளன.
இனி வரும் நாட்களில் அளவுக்கு அதிகமான உடல்கள் வரும்பட்சத்தில் விரைவாக உடல் அடக்கங்களை மேற்கொள்ளும் வகையில் இடுகாட்டில் 12க்கும் மேற்பட்ட சவக்குழிகள் தோண்டிவைக்கப்பட்டுள்ளது.
போபாலில் கரோனா பரவும் அதிக அபாயம் கொண்ட பகுதியாக இருப்பது ஜஹாங்கிராபாத். போபலில் இதுவரை 900 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில், அதிக மக்கள் நெருக்கடி கொண்ட ஜஹாங்கிராபாத்தில் மட்டும் 225 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் இருந்து மட்டும் கடந்த ஒரு சில நாட்களில் 1500 - 2000 பேர் வரை முன்னெச்சரிக்கையாக வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ஜஹாங்கிராபாத் பகுதி முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக ஒரே நாளில் ஆறு உடல்கள் நல்லடக்கம் செய்ய வருகிறது. ஒரு குழியைத் தோண்ட குறைந்தது 4 மணி நேரம் ஆகிறது. ரமலான் மாதம் என்பதால் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதும் சிரமமாக இருக்கிறது. எனவேதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், குழிகள் தோண்ட ஜேடிபி வாகனம் வரவழைக்கப்பட்டால் வேலை எளிதாக இருக்கும் என்றும் அங்கு பணியில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.