புது தில்லி: பிரதமர் அறிவித்த தற்சார்பு திட்டம் என்பது இந்தியாவை தனிமைப்படுத்தும் கொள்கை அல்ல, மாறாக, இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையைப் பலப்படுத்துவது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் இன்று நான்காவது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்.
புது தில்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு எதிர்கொண்டிருக்கும் மிகக் கடினமான சவாலை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்று மோடி கூறியுள்ளார். தற்சார்பு இந்தியா என்று சொல்லும் போது, அது இந்தியாவை தனிமைப்படுத்தும் கொள்கையாக இருக்காது, மாறாக, இந்தியாவில் தயாரிப்போம் என்ற கொள்கையை பலப்படுத்துவது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று 8 துறைகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், கனிமங்கள், பாதுகாப்பு தளவாட உற்பத்தி, விமானம், விண்வெளி, அணுசக்தி உள்ளிட்ட துறைகளுக்கு இன்று அறிவிப்புகள் வெளியாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர் பேசுகையில், இந்தியாவை பொருளாதார ரீதியாக தற்சார்பு இந்தியாவாக மாற்றுவது மிகவும் முக்கியம்.
தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தங்கள் தேவை. நிறைய துறைகளில் வழிமுறைகள் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும். பிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.