புது தில்லி; ஏழை மக்களின் இன்றைய தேவை பணம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
காணொலி காட்சி மூலம் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், ஏழை மக்கள் தற்போதிருக்கும் சூழ்நிலையில் நிதியுதவியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். கடனை அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று ஏழை மக்களுக்குத் தேவையானது பணம்தான். எனவே, பிரதமர் நரேந்திர மோடியை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு கூர்ந்து சிறப்பு திட்டத்தை மாற்றியமையுங்கள்.
ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்க வேண்டும். அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய நிலை இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள். அவர்கள்தான் நமது நாட்டின் எதிர்காலம் என்றும் ராகுல் கூறியுள்ளார்.