குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தமிழகத்தில் இருந்து பொதுமக்கள் கர்நாடகம் வர மே 31 வரை அனுமதிக்கப்பட மாட்டாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:
நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை பொறுத்து தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது. மாநிலத்துக்குள் இயங்கும் அனைத்து ரயில்களுக்கும் அனுமதி வழங்கப்படும். காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கரோனா பரவல் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும். மேலும், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய 4 மாநிலங்களில் இருந்து மே 31 வரை பொதுமக்கள் யாரும் கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.