பிகாரின், பாகல்பூர் மாவட்டத்தில் பேருந்துடன் லாரி மோதிய விபத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாகல்பூர் மாவட்டத்தில் அம்போ சவுக் அருகே தேசிய நெடுஞ்சாலை 31-ல் இன்று காலை 6 மணியளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிவந்த லாரியுடன் பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று நாகாச்சியா காவல் கண்காணிப்பாளர் நிதி ராணி தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
கடந்த ஆறு நாள்களுக்கு முன்னதாக கொல்கத்தாவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர் மிதிவண்டிகளில் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் வழியில் எங்காவது லாரியில் ஏறியிருக்கலாம் என்றார்.
மேலும், மேற்கு வங்கத்திலிருந்து பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் மற்றும் கிளீனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.
புலம் பெயர்ந்தோரின் தரவுகளின் படி, சில தொழிலாளர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அற்றில் கிழக்கு மற்றும் மேற்கு சம்பரன் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
தர்பங்காவிலிருந்து பாங்காவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்தவர்களில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.