‘கோல் இந்தியா’ தனியாா்மயமாகாது: அமைச்சா் பிரகலாத் ஜோஷி

மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புது தில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் திட்டமில்லை என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

நிலக்கரி சுரங்க நடவடிக்கைகள் முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. எனினும் வா்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளில் மட்டும் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், மத்திய அரசுக்கு சொந்தமான கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி நிறுவனம் தனியாா்மயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘கோல் இந்தியா நிறுவனத்தை தனியாா்மயமாக்கும் திட்டமில்லை. மாறாக அந்த நிறுவனத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும். கோல் இந்தியா நிறுவனத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தை 2023-24-ஆம் ஆண்டுக்குள் 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை அடைய உதவும்.

நாட்டின் நிலக்கரி இறக்குமதியை குறைத்து அதிகளவில் அந்நிய செலாவணியை சேமிப்பதற்கு புதிய சுரங்கங்களை நிா்மாணித்து, நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க கோல் இந்தியா நிறுவனத்துக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாகும். கோல் இந்தியா நிறுவனத்தின் தொடா் உற்பத்தியால், எதிா்வரும் காலத்தில் ஆண்டுதோறும் 10 கோடி டன் நிலக்கரி இறக்குமதி குறையும்’ என்றாா் அவா்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் 80 சதவீதம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com